குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பஞ்சாப்


குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பஞ்சாப்


ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் குஜராத் வென்றிருந்தது. அந்த வெற்றியை தொடர வேண்டும் என குஜராத்தும், கடந்த முறை தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்க பஞ்சாப் அணியும் களமிறங்கின.

டி.ஒய் பாட்டில் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியி குஜராத் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக வீரர்களாக சஹாவும், சுப்மன் கில்லும் களமிறங்கி பஞ்சாப் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். தேவைப்பட்ட நேரத்தில் பவுண்டரி அடித்து அடித்தளத்தை வலுவாக அமைக்க ஆரம்பித்தபோது ரன் அவுட்டில் சுப்மன் கில் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுதர்சனோடு சஹா ஜோடி சேர்ந்தார். ஆனால் கில் சென்ற சிறிது நேரத்திலேயே சஹாவும் 21 ரன்களில் நடையை கட்டினார். இதனால் அந்த அணி 4 ஓவர்களுக்கு 34 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து பாண்டியாவும், சுதர்சனும் இணைந்தனர். பாண்டியா வந்த வேகத்திலேயே ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

கேப்டனின் வெளியேற்றத்தை அடுத்து மில்லர் உள்ளே வந்தார். சுதர்சன் - மில்லர் ஜோடி பஞ்சாப் பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மில்லர் லிவிங்ஸ்டோன் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

குஜராத் இடறில் இருக்கும்போதெல்லாம் காப்பாற்றும் ராகுல் தெவாட்டியா களமிறங்கினார். பஞ்சாப் பந்துவீச்சை பக்குவமாக எதிர்கொண்ட இந்த ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது.

 

இருவரும் நீடித்து ஆடுவார்கள் என்று நினைத்திருந்த சமயத்தில் ராகுல் தெவாட்டியா ரபாடோ ஓவரில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ரஷித் கானும் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுக்க அந்த அணி 114-6 என்ற நிலையில் தடுமாறியது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் சுதர்சன் பொறுமையாக விளையாடி 42 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். ஆனால் அவருக்கு யாரும் துணை இல்லாததால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. சுதர்சன் ஆட்டமிழக்காமல் 65 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதனையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் பஞ்சாப்  அணி தொடக்க ஆட்டக்காரர்களாக பேர்ஸ்டோவும், தவானும் களமிறங்கினர். பேர்ஸ்டோ ஆட்டமிழக்க அவருக்கு அடுத்து ராஜபக்சே களமிறங்கினார். இருவரும் இணைந்து 50 ரன்களை எடுத்தனர்.

சிறப்பாக விளையாடிய தவான் ஐபிஎல்லில் தனது 47ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். இதனையடுத்து ஃபெர்குசன் ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ராஜபக்சே 40 ரன்களில் வெளியேறினார்.

அவருக்கு பிறகு களம் கண்ட லிவிங்ஸ்டோனுடன் தவான் இணைந்து சிறப்பாக விளையாடினார். இவர்கள் இருவரும் குஜராத் பந்துவீச்சை எவ்வித சிரமுமின்றி எதிர்கொண்டனர்.

குறிப்பாக ஷமி வீசிய ஆட்டத்தின் 16ஆவது ஓவரில் லிவிங்ஸ்டோன் தொடர்ச்சியாக 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடித்து பஞ்சாப் அணியின் வெற்றி பெற செய்தார். இதன் காரணமாக பஞ்சாப்  அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

Comments

Popular posts from this blog